மதுக்கடை திறக்க எதிர்ப்பு பொதுமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு

மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோட்டூரில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-07-26 22:45 GMT
கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள இருள்நீக்கி சாலையில் புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சின்னகுருவாடி, சிறாங்குடி, சோத்திரியம், நெருஞ்சனக்குடி இருள்நீக்கி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.

தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்துராமலிங்கம் ஆகியோர் சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பொதுமக்களுக்கு தெரிவிக்காமல் இருள்நீக்கி பகுதியில் எந்த இடத்திலும் மதுக்கடை திறக்க அனுமதிக்க மாட்டோம் என அவர்கள் உறுதி அளித்ததின் பேரில் சாலைமறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்