ஆம்னி பஸ்– லோடு ஆட்டோ மோதல்: பால் வியாபாரி சாவு

கயத்தாறு அருகே ஆம்னி பஸ்– லோடு ஆட்டோ மோதிய விபத்தில் பால் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2017-08-11 20:30 GMT

கயத்தாறு,

கயத்தாறு அருகே ஆம்னி பஸ்– லோடு ஆட்டோ மோதிய விபத்தில் பால் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

பால் வியாபாரி

கயத்தாறு அருகே உள்ள ஆசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 57). பால் வியாபாரி. இவர் தனது லோடு ஆட்டோவில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பால் சேகரித்து, கயத்தாறு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்துக்கு வழங்குவது வழக்கம்.

இவர் நேற்று காலையில் வழக்கம்போல் தனது லோடு ஆட்டோவில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பால் சேகரித்து கொண்டு, தளவாய்புரம் நாற்கரசாலை வழியாக கயத்தாறுக்கு சென்று கொண்டிருந்தார். கயத்தாறு அருகே சென்று கொண்டிருந்தபோது, சென்னையில் இருந்து நெல்லைக்கு சென்ற தனியார் ஆம்னி பஸ் எதிர்பாராதவிதமாக லோடு ஆட்டோவின் பின்பக்கத்தில் பலமாக மோதியது.

போலீசார் விசாரணை

இந்த விபத்தில் லோடு ஆட்டோவில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட அவர், பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த பேச்சிமுத்துவுக்கு ஆறுமுகத்தாய் (53) என்ற மனைவியும், 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்