ஓசூரில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் அமைச்சர் தொடங்கி வைத்தார்

ஓசூர் கல்வி மாவட்டம் சார்பில் 2017- 2018-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் நேற்று தொடங்கியது.

Update: 2017-08-11 22:21 GMT
ஓசூர்,

 இந்த நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி வரவேற்றார்.

நிகழ்ச்சியில் தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து தடகள போட்டி வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தீபத்தை ஏற்றி வைத்து தடகள போட்டிகளை தொடங்கி வைத்தார்.

இந்த தடகள போட்டிகள் இன்றும் (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த போட்டியில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 650 மாணவ, மாணவிகளும், தனியார் பள்ளிகளை சேர்ந்த 450 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 1,100 மாணவ, மாணவிகள் கலந்து கொள்கிறார்கள். இதில் 33 விதமான தடகள போட்டிகள் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன், ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் ரங்கநாத், உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றிய தலைவர் தென்னரசு, தர்மபுரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கே.நாராயணன், அ.தி.மு.க. (அம்மா அணி) நகர செயலாளர் எஸ். நாராயணன், முன்னாள் கவுன்சிலர் முரளி, கூட்டுறவு வங்கி தலைவர் நடராஜன், சிப்காட் அரிமா சங்க தலைவர் ராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்