மும்பை பாண்டுப்பில் ஹைட்ரஜன் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி

பாண்டுப்பில் ஹைட்ரஜன் சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2017-08-12 21:38 GMT
மும்பை,

மும்பை பாண்டுப் பகுதியில் நேற்று காலை 7.30 மணி அளவில் ஒருவர் ஹைட்ரஜன் சிலிண்டரை கொண்டு பலூனில் காற்று நிரப்பிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் வைத்திருந்த ஹைட்ரஜன் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதியில் இருந்த கட்டிடங்கள் அதிர்ந்தன. மேலும் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து தூள் தூளானது. இதில் அங்கு நின்றுகொண்டிருந்த 2 பேர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் பலியானவர் நதீர் வகாம் அப்துல்கான் என்பது தெரியவந்தது.

இந்த விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை. சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்