மெரினாவில் பரிதாபம்: கடலில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி

சென்னை மெரினா கடற்கரைக்கு விளையாட வந்த பள்ளி மாணவர்கள் 2 பேர் கடலில் மூழ்கி பலியானார்கள்.

Update: 2017-08-15 00:30 GMT
சென்னை,

சென்னை வேளச்சேரி காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் மாநகர பஸ்சில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் கிஷோர் (வயது 15). இவர் வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சைதாப்பேட்டை சின்னமலை பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவருடைய மகன் தீபக் (15). இவரும் அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை கிஷோர் மற்றும் தீபக் ஆகிய இருவரும் தனது பள்ளி நண்பர்கள் 10 பேருடன் சேர்ந்து சென்னை மெரினா கடற்கரைக்கு கால்பந்து விளையாட்டு பயிற்சிக்காக வந்தனர். சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற இந்த பயிற்சிக்கு பின் மாணவர்களில் சிலர் மெரினா கடலில் குளித்துக் கொண்டிருந்தனர்.

பிணமாக மீட்பு

அப்போது திடீரென வந்த ராட்சத அலை கடலில் குளித்துக் கொண்டிருந்த கிஷோரை கடலுக்குள் இழுத்து சென்றது. இதை பார்த்த தீபக், கிஷோரை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக தீபக்கும் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு மாணவர்கள் தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் மெரினா போலீசார் விரைந்து வந்து, மீனவர்கள் உதவியுடன் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட அந்த 2 மாணவர்களையும் தேடினர். சுமார் 1 மணி நேர தேடுதலுக்கு பின் கிஷோர் மற்றும் தீபக் ஆகிய இருவரையும் போலீசார் பிணமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்