திருவண்ணாமலையில் அனைத்துத்துறை அலுவலர்களுக்கு இடையேயான ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலையில் அனைத்துத்துறை அலுவலர்களுக்கு இடையேயான ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீரஜ்குமார் கலந்து கொண்டார்.
திருவண்ணாமலை,
கூட்டத்தில் விவசாயத்துறை, தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, நகர்புற வீட்டுவசதித் துறை நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து அறிவுரைகளை கண்காணிப்பு அலுவலர் வழங்கினார்.
இதில் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீரஜ்குமார் ஆரணி நகராட்சி கோட்டை மைதானத்தில் நடைபாதை அமைக்கும் பணி, கூட்டு குடிநீர் திட்டப்பணி, ராட்டினமங்கலம் ஊராட்சியில் தனிநபர் இல்ல கழிப்பறை கட்டும் பணி, அரியபாடி ஊராட்சியில் சிறுபாசன ஏரி தூர்வாரும் பணி, கேபியன் தடுப்பணை பணி, செய்யாற்றின் குறுக்கே கலசபாக்கம் தாலுகாவில் உள்ள ஆணைவாடியில் பொதுப்பணித்துறையின் மூலம் தடுப்பணை கட்டும் பணி உள்ளிட்ட திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.