பவானி ஆற்றில் மணல் கடத்தலை தடுக்க கரையோரத்தில் பள்ளம்

பவானி ஆற்றில் மணல் கடத்தலை தடுக்க கரையோரத்தில் அதிகாரிகள் பள்ளம் தோண்டினர்.

Update: 2017-08-25 22:00 GMT

பவானி,

பவானியை அடுத்துள்ள எலவமலை, மேட்டுநாசுவம்பாளையம், மூலப்பாளையம், கரை எல்லப்பாளையம் ஆகிய பகுதிகளில் பவானி ஆற்றில் இருந்து வாகனங்களில் மணல் கடத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதனால் அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு மணல் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்தார்கள். ஆனால் அதிகாரிகளை ஏமாற்றி மாட்டுவண்டி, டிராக்டர்களில் மர்ம நபர்கள் மணல் கடத்தி வந்தார்கள்.

இந்தநிலையில் மணல் கடத்தலை தடுக்க, மணல் ஏற்ற வரும் வாகனங்கள் ஆற்றில் இறங்காதபடி எலவமலை கரையோரத்தில் 6 இடங்கள், மேட்டுநாசுவம்பாளையத்தில் 2 இடங்கள், மூலப்பாளையம் பிரிவு மற்றும் கரை எல்லப்பாளையத்தில் தலா ஒரு இடங்களில் பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகள் பெரிய பள்ளங்களை தோண்டியுள்ளார்கள்.

மேலும் பவானி கரையோரங்களில் சித்தோடு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் தீவிர பாதுகாப்பிலும் ஈடுபட்டுள்ளார்கள்.

மேலும் செய்திகள்