100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்

தா.பேட்டை அருகே வேலை வழங்க கோரி 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-09-09 22:45 GMT
தா.பேட்டை,

துறையூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது பொன்னுசங்கம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டம் எனப்படும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கடந்த சில மாதங்களாக பணி வழங்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த வாரம் முதல் மீண்டும் பணி வழங்கப்்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் பணிக்கு வந்தனர். ஆனால் மழை பெய்வதால் அவர்களுக்கு வேலை இல்லை என்று பணி தள பொறுப்பாளர் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் வேலை வழங்க கோரி துறையூர் - முசிறி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துறையூர் தாசில்தார் சந்திரகுமார், துறையூர் ஊராட்சி ஒன்றிய திட்ட ஆணையர் பழனிசாமி, வருவாய் ஆய்வாளர் ஜெர்சிமேரி, கிராம நிர்வாக அலுவலர் ரெங்கநாதன் மற்றும் ஜெம்புநாதபுரம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து கூலித்தொழிலாளர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்