குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர் பலி நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்

புத்தாநத்தம் அருகே நண்பர்களுடன் குளித்தபோது குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2017-09-10 23:00 GMT
மணப்பாறை,

திருச்சி மாவட்டம், புத்தாநத்தத்தை அடுத்த கருப்பூரை சேர்ந்தவர் ரெங்கன். இவருடைய மகன் பாலசுப்ரமணியன்(வயது 12). கருப்பூரில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் கருப்பூரில் உள்ள பெரியகுளத்தில் குளிப்பதற்காக நண்பர்களுடன் பாலசுப்ரமணியன் சென்றார். கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக, குளத்தில் சில இடங்களில் மண் அள்ளப்பட்ட பகுதியில் இருந்த பள்ளங்களில் தண்ணீர் நிரம்பி இருந்தன.

இந்நிலையில் பாலசுப்ரமணியன் மற்றும் அவருடைய நண்பர்கள் 3 பேர் குளத்தில் இறங்கி குளித்தனர். அப்போது பாலசுப்ரமணியன் திடீரென தண்ணீரில் தத்தளித்தபடி மூழ்கினார். இதை பார்த்த அவருடைய நண்பர்கள் சத்தம் போட்டபடி ஓடிச்சென்று அக்கம், பக்கத்தில் இருந்தவர்களிடம் கூறினர்.

அவர்கள் ஓடி வந்து குளத்தில் இறங்கி பாலசுப்ரமணியனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவரை கரைக்கு கொண்டு வந்து பார்த்தபோது, அவர் இறந்துவிட்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் பற்றி தகவல் தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார், அங்கு வந்து பாலசுப்ரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறை நாளில் குளத்தில் குளிக்கச் சென்ற மாணவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்