கன்டெய்னர் லாரி கவிழ்ந்து 11 மாடுகள் செத்தன

காவேரிப்பட்டணம் அருகே கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் 11 மாடுகள் செத்தன.

Update: 2017-09-24 23:00 GMT
காவேரிப்பட்டணம்,

கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்தவர் தஸ்தகீர் (வயது 55). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் கன்டெய்னர் லாரியில் பெங்களூருவில் இருந்து பொள்ளாச்சி சந்தைக்கு 25 மாடுகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு 12.30 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே தர்மபுரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்று கொண்டிருந்தது.

அப்போது தேர்பட்டி புளியாண்டியூர் என்னும் இடத்தில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 25 மாடுகளில் 11 மாடுகள் சம்பவ இடத்திலேயே செத்தன. தஸ்தகீர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இதைத் தொடர்ந்து நேற்று காலை காவேரிப்பட்டணம் போலீசார் கிரேன் உதவியுடன் விபத்துக்குள்ளான லாரியை மீட்டனர். மேலும் விபத்தில் இறந்த மாடுகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்