டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுமி பலி சாவு எண்ணிக்கை 6ஆக உயர்வு

டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுமி பலியானதால் சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2017-09-24 22:45 GMT
கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சையது. இவரது மகள் சவுஹீமிதா (வயது 4). இவள் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தாள். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக சவுஹீமிதாவிற்கு காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் அவளது பெற்றோர் மணமேல்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுமியை சேர்த்து சிகிச்சை அளித்தனர். இருப்பினும் காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்தனர்.

இதில் சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சவுஹீமிதா பரிதாபமாக இறந்தாள். கடந்த சில நாட்களில் மட்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் காய்ச்சலுக்கு 5 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் தற்போது மேலும் ஒரு சிறுமியும் இறந்துள்ளதால் பலி எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கோட்டைப்பட்டினம் பகுதியில் ஏராளமான குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறையினர் இப்பகுதியில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. பல முறை புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி இப்பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காய்ச்சலால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். என்றனர்.

மேலும் செய்திகள்