பெங்களூரு மாநகராட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்க ஒருங்கிணைப்பு குழுவுக்கு காங்கிரஸ் ஒப்புக் கொள்ள வேண்டும்

பெங்களூருவில் முக்கிய முடிவுகளை எடுக்க ஒருங்கிணைப்பு குழுவுக்கு காங்கிரஸ் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று தேவேகவுடா கூறினார்.

Update: 2017-09-24 22:34 GMT

பெங்களூரு,

முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

பெங்களூரு மாநகராட்சி மேயர் தேர்தல் குறித்து இன்று(அதாவது, நேற்று) நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினேன். எந்தெந்த நிலைக்குழுக்களை கேட்டு பெறுவது என்பது குறித்து நிர்வாகிகள் தங்களின் கருத்தை தெரிவித்தனர். கடந்த 2 ஆண்டுகளில் எங்கள் கட்சிக்கு ஏற்பட்ட வேதனையான சில வி‌ஷயங்களை நிர்வாகிகள் எடுத்துக்கூறினர்.

மேயர் பதவி யாருக்கு வழங்க வேண்டும் என்பதை காங்கிரஸ் முடிவு செய்யும். அந்த கட்சி யாரை வேண்டுமானாலும் மேயராக தேர்ந்து எடுக்கட்டும். இதில் நாங்கள் தலையிட மாட்டோம். துணை மேயர் பதவி எங்கள் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் கவுன்சிலர்களில் யாருக்கு துணை மேயர் பதவி வழங்க வேண்டும் என்பது பற்றி ஆலோசனை நடத்தினோம். இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

மீண்டும் ஒரு முறை நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும். இன்னும் 27–ந் தேதி வரை கால அவகாசம் உள்ளது. பெங்களூருவில் முக்கிய முடிவுகளை எடுக்க மாநகராட்சியில் ஒருங்கிணைப்பு குழு அமைக்க காங்கிரஸ் ஒப்புக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

மேலும் செய்திகள்