டெங்கு ஒழிப்பு பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு

நெல்லை மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

Update: 2017-10-15 22:45 GMT
சிவகிரி,

சிவகிரி ஊராட்சி ஒன்றிய ஜவகர் நடுநிலைப்பள்ளி பயிலும் மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள், தீபாவளிக்கு ஆடைகள் வழங்குதல், புதிய குடிநீர் குழாய்கள் திறப்பு, மரக்கன்று நடுதல் உள்ளிட்ட விழாக்கள் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கினார். தென்காசி உதவி கலெக்டர் ராஜேந்திரன், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா முதுநிலை மேலாளர் ராஜேந்திரன், டாக்டர் செண்பக விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர்கள் சங்க ஆலோசகர் வைரவன் வரவேற்றார். முன்னாள் மாணவர் சங்க தலைவர் கந்தையா, செயலாளர் திருப்பதி ஆகியோர் பேசினர். தொடர்ந்து கலெக்டர் சந்தீப் நந்தூரி விழாவை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, அவர் பேசும் போது கூறியதாவது:-

மாணவ- மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி மற்றும் பல்வேறு உதவிகளை அரசு செய்து கொடுக்கிறது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் கண்டிப்பாக பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும். நடுநிலைப்பள்ளியாக உள்ள இந்த பள்ளியை பெண்கள் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி தர முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் மனு கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து அரசுக்கு தகவல் தெரிவித்து, விரைவில் நடவடிக்கை எடுப்பேன். தற்போது டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு ஒழிப்பு பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் தாசில்தார் சாந்தி, வட்டார மருத்துவ அலுவலர் சாந்தி சரவணபாய், வக்கீல் பொன்ராஜ் சேதுராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் மல்லிகா நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்