கோபி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த அரசு பஸ் டிரைவர் சாவு நாய் குறுக்கே பாய்ந்ததால் விபரீதம்

கோபி அருகே நாய் குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த அரசு பஸ் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-10-15 23:08 GMT
கடத்தூர்,

சத்தியமங்கலம் நேருநகரை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 45). இவர் சத்தியமங்கலம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

செல்வகுமார் நேற்று முன்தினம் இரவு குருமந்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார்.

சத்தி-கோவை மெயின்ரோட்டில் கணபதிபாளையம் பகுதியில் சென்றபோது ரோட்டின் குறுக்கே ஒரு நாய் பாய்ந்தது.

அந்த நாய் மீது மோதாமல் இருக்க செல்வகுமார் திடீரென பிரேக் பிடித்தார். இதில் நிலைதடுமாறிய அவர் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே செல்வகுமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்த செல்வகுமாருக்கு அனிதா (32) என்ற மனைவியும், பிரசாந்த் (6) என்ற மகனும், சந்தியா(12) என்ற மகளும் உள்ளார்கள்.

இறந்த செல்வகுமாரின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மேலும் செய்திகள்