பிலிப்பைன்ஸ் கடலில் சரக்கு கப்பல் மூழ்கியது: மாயமான புன்னக்காயல் மாலுமி உள்பட 10 பேரை தேடும் பணி தீவிரம்

பிலிப்பைன்ஸ் கடலில் சரக்கு கப்பல் மூழ்கியது. இதில் பயணம் செய்த புன்னக்காயல் மாலுமி உள்ளிட்ட 10 பேரை தேடும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2017-10-16 20:45 GMT

ஆறுமுகநேரி,

பிலிப்பைன்ஸ் கடலில் சரக்கு கப்பல் மூழ்கியது. இதில் பயணம் செய்த புன்னக்காயல் மாலுமி உள்ளிட்ட 10 பேரை தேடும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சரக்கு கப்பல் மூழ்கியது

துபாய் நாட்டின் ஸ்டெல்லார் ஓசன் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ‘எமரால்டு ஸ்டார்‘ என்ற சரக்கு கப்பல் ஹாங்காங் நாட்டில் இருந்து ஜப்பானுக்கு புறப்பட்டு சென்றது. இந்த கப்பலில் 26 மாலுமிகள் பயணம் செய்தனர். கடந்த 13–ந் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டின் கடல் பகுதி வழியாக சென்றபோது திடீரென்று கடும் புயல் வீசியதில் சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது.

இந்த கப்பலில் பயணம் செய்த 26 மாலுமிகள் பாதுகாப்பு மிதப்பு உடை அணிந்து கடலில் குதித்தனர். அப்போது அந்த வழியாக 2 கப்பல்கள் வந்தவர்கள், கடலில் தத்தளித்தவர்களில் 16 பேரை மீட்டனர். 10 மாலுமிகளின் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புன்னக்காயல் மாலுமி மாயம்

மாயமான மாலுமிகளில் ஒருவர் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயலைச் சேர்ந்த பெவின் தாமஸ்(வயது 22) ஆவார். இவருடைய பெற்றோர் பெவின் பெர்னாந்து–ரெஜீஸ். இவர்களுக்கு 3 மகள்களும், பெவின் தாமஸ் என்ற மகனும் உள்ளனர்.

பெவின் தாமஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் கடலில் மாலுமி பணிக்கு சேர்ந்தார்.

சரக்கு கப்பல் மூழ்கிய விபத்தில் புன்னக்காயல் மாலுமி மாயமானதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

மேலும் செய்திகள்