அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாணவர்களின் கற்றல் தர நிலை மேம்படுத்துவதற்கான ஆய்வுக்கூட்டம்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாணவர்களின் கற்றல் தர நிலை மேம்படுத்துவதற்கான ஆய்வுக்கூட்டம் மாநில திட்ட இயக்குனர் நந்தகுமார் தலைமையில் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது.

Update: 2017-11-18 22:30 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் மாணவர்களின் கற்றல் அடைவு மற்றும் தரநிலை மேம்படுத்துவதற்கான ஆய்வுக்கூட்டம், மாநில திட்ட இயக்குனர் நந்தகுமார் தலைமையில் நடந்தது. கலெக்டர் கதிரவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திட்ட இயக்குனர் நந்தகுமார் பேசியதாவது:-

24 பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கற்றல் அடைவில் குறைவாக உள்ள மாணவர்களுக்கு தனிகவனம் செலுத்தி, அந்த மாணவர்கள் கற்றல் நிலையை உயர்த்த வேண்டும். வருகிற ஜனவரி மாதம் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும் போது, அனைத்து பள்ளிகளிலும் செயல்வழிக் கற்றல் மற்றும் படைப்பாற்றல் கல்வி முறையாக பின்பற்றப்பட வேண்டும், மாணவர்களின் அடைவு நிலை மேம்பட்டிருக்க வேண்டும்.

தளி, கெலமங்கலம் ஒன்றியங்களில் ஓராசிரியர் பள்ளிகள் அதிகம் இருப்பதாலும், ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாலும் மாணவர்களின் கல்வித்தரம் மிகவும் குறைவாக உள்ளது. தளி, கெலமங்கலம் பகுதியில் 9 அல்லது 10-ம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் இருப்பின் அவர்களை தொடக்கப்பள்ளியில் பணிபுரிய தேவையான தொகுப்பு ஊதியம் மாநில அலுவலகத்திலிருந்து வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, இணை இயக்குனர்கள், உதவி திட்ட அலுவலர்கள் (சென்னை, வேலூர், திருவண்ணாமலை) மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்