குளச்சல் கடலில் பொதுமக்கள் குளிக்க ‘திடீர்’ தடை

குளச்சல் கடலில் பொதுமக்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ‘திடீர்’ தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2017-11-19 22:45 GMT
குளச்சல்,

குளச்சல் கடற்கரை இயற்கை எழில் சூழ்ந்த இடமாகும். இதனால் இந்த கடற்கரை அழகை கண்டு ரசிக்கவும், கடற்கரை மணலில் அமர்ந்து காற்று வாங்கவும் உள்ளூர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் இங்கு தினசரி வருவது வழக்கம்.

விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் குளச்சல் கடற்கரைக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக காணப்படும். மேலும், கடற்கரையில் இருந்து கடலுக்குள் சுமார் 165 மீட்டர்  நீளத்தில் பாலமும் அமைந்துள்ளது.

குளிக்க ‘திடீர்’ தடை

இந்த பாலத்தில் நடந்து சென்று கடல் அழகை பொதுமக்கள் ரசிப்பார்கள். பாலத்தில் கடல் அலைகள் மோதி கடல் நீர் முகத்தில் தெளிப்பது சிலிர்ப்பான அனுபவத்தை கொடுக்கும் என்பதால் இந்த பாலத்தில் செல்ல அனைவரும் ஆர்வம் காட்டுவார்கள். மேலும், சிலர் ஆர்வம் மிகுதியால் குளச்சல் கடலில் குளித்து மகிழ்வதும் உண்டு.

இந்தநிலையில் குளச்சல் கடலில் பொதுமக்கள் குளிக்க ‘திடீர்’ தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகையும் கடற்கரை பாலத்தின் முகப்பில் வைக்கப்பட்டுள்ளது. அந்த பலகையில், ‘குளச்சல் கடற்கரை பகுதியில் கடலில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் கடலில் குளிக்க வேண்டாம் மீறினால் தண்டிக்கப்படுவீர்கள்’ என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அவசர உதவிக்கு...

இதேபோல் கடலோர பாதுகாப்பு குழு போலீசார் சார்பிலும் ஒரு அறிவிப்பு பலகை கடற்கரையில் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஆபத்துகாலத்தில் அவசர உதவிக்கு 1093 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் உதவி பெறலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் பாலத்திற்கு செல்லாமல் இருப்பதற்காக அதன் நுழைவு பகுதியில் பெரிய பாறாங்கற்களை போட்டு தடையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குளச்சலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்கும் ஆர்வத்தால் அலையில் சிக்கி பலியாகின்றனர். இதைதடுக்கும் விதமாக இந்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்