தனியார் பஸ்சை மறித்து பயணிகள் போராட்டம் ‘திடீர்’ கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு

தனியார் பஸ்களில் திடீரென கட்டண உயர்வு செய்யப்பட்டதால் வாணியம்பாடியில் பஸ்சை மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-11-19 23:00 GMT
வாணியம்பாடி,

வேலூரில் இருந்து ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி செல்லும் தனியார் பஸ்களில் திடீரென எக்ஸ்பிரஸ் என பெயர் பலகை வைத்து கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ரூ.10 ஆக இருந்த கட்டணம் ரூ.13 ஆகவும், ரூ.7 கட்டணம் ரூ.10 எனவும், ரூ.29 கட்டணம் ரூ.40 ஆகவும், ரூ.60 கட்டணம் ரூ.67 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு 8 மணியளவில் வேலூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி வந்த தனியார் பஸ்களில் கட்டண உயர்வு செய்ததால் கண்டக்டருடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் கண்டக்டர்கள், உயர்த்தப்பட்ட கட்டணத்தை கொடுக்காவிட்டால் கீழே இறங்குங்கள் என கூறினர். இதனால் பயணிகள் அவர்கள் கேட்கும் கட்டணத்தை கொடுத்தனர்.

இந்த நிலையில் இரவு 8.30 மணியளவில் வாணியம் பாடிக்குள் தனியார் பஸ்கள் வந்தபோது அந்த பஸ்சை மறித்து அதிலிருந்த பயணிகள் கீழே இறங்கி அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஸ் கட்டண உயர்வை கைவிடக்கோரியும், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்ககோரியும் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாணியம்பாடி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. 

மேலும் செய்திகள்