ஆறுமுகநேரியில் பஸ் மோதி புது மாப்பிள்ளை சாவு டிரைவர் கைது

ஆறுமுகநேரியில் பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற புது மாப்பிள்ளை பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரை கைது செய்தனர்.

Update: 2017-11-19 23:00 GMT
ஆறுமுகநேரி,

ஆறுமுகநேரி கீழநவழடிவிளையை சேர்ந்தவர் சின்னத்துரை. இவருக்கு 3 மகன்கள், 2 மகள்கள். மூத்த மகன் இசக்கிராஜா (வயது 25). கொத்தனார். இவர் பக்கத்து வீட்டை சேர்ந்த கார்த்திகா என்பவரை காதலித்து, கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். தற்போது, அவர் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

நேற்று முன்தினம் இரவு இசக்கிராஜா வேலை வி‌ஷயமாக, தன்னுடன் வேலை செய்யும் மற்றொரு கொத்தனாரை நாககன்னியாபுரத்தில்   பார்த்து விட்டு, ஆறுமுகநேரிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

ஆறுமுகநேரி தபால் நிலையம் முன்பு வந்து கொண்டிருந்த போது திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற தனியார் பஸ், எதிர்பாராத விதமாக அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட இசக்கிராஜா தலையில் பலத்த காயம் அடைந்து, உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் மற்றும் ஆறுமுகநேரி போலீசார், அவரை மீட்டு காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரான வல்லநாடை சேர்ந்த ஜெய்னுதீன் என்பவரை கைது செய்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்