வழிப்பறி முயற்சி வழக்கில் கைதான 3 பேர் பயங்கரவாதி அபுதாகீரின் கூட்டாளிகள் போலீஸ் விசாரணையில் தகவல்

மாதவரம் அருகே வழிப்பறி முயற்சி வழக்கில் கைதான 3 பேர் பயங்கரவாதி அபுதாகீரின் கூட்டாளிகள் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2017-11-23 22:15 GMT
செங்குன்றம்,

சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணையைச் சேர்ந்தவர் செந்தில்வேலு (வயது 46). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

செந்தில்வேலு நேற்று முன்தினம் இரவு மாதவரம் பால்பண்ணை அருகே உள்ள ஆவின் பாலகம் எதிரே நடந்து சென்றுகொண்டிருந்த போது, 3 பேர் அவரை வழிமறித்து கழுத்தில் கத்தியை வைத்து அவரிடம் இருந்த பணம், நகை ஆகியவற்றை பறிக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த மாதவரம் பால்பண்ணை இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் மூவரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் மதுரை தக்கூவா பள்ளி வல்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த தீயாவுதீன்(37), சிக்கந்தர்(35), சென்னையை அடுத்த புழல் விநாயகபுரம் லட்சுமிநகர் 4-வது தெருவைச் சேர்ந்த பாபு என்ற புள்ளிகுளம் பாபு(42) என தெரியவந்தது.

இவர்களில் தீயாவுதீன் 2015-ம் ஆண்டு இமாம்அலி நினைவு நாள் அன்று மதுரை ஆரப்பாளையத்தில் அரசு பஸ்சுக்கு வெடிகுண்டு வைத்தவர் என்றும், வழிப்பறி வழக்குகளில் சம்பந்தப்பட்ட சிக்கந்தர் சிவகாசியில் 2015-ம் ஆண்டு டாக்டர் செந்தில்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி என்றும், புள்ளிகுளம் பாபு கன்டெய்னரில் வரும் விலை உயர்ந்த பொருட்களை கடத்திய வழக்கில் சம்மந்தப்பட்டவர் என்றும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இந்த 3 பேரும், அம்பத்தூர்ில் பாரதீய ஜனதா மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான பயங்கரவாதி அபுதாகீரின் கூட்டாளிகள் என்பதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து திருவெற்றியூர் கோர்ட்டில் ஆஜார்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்