திருப்போரூர் அருகே குளத்தில் தவறி விழுந்து பள்ளி மாணவன் சாவு

திருப்போரூர் அருகே குளத்தில் தவறி விழுந்து 1–ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2017-12-17 23:15 GMT

திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த மானமதி ஈச்சம்பல்லம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி சசிகலா. இவர்களுடைய மகன் ரித்தீஷ் (வயது 6). இவன், திருப்போரூரை அடுத்த கண்ணகப்பட்டு ஆதி திராவிடர் தொடக்கப்பளியில் 1–ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று முன்தினம் சசிகலா, தனது மகன் மற்றும் மகளுடன் திருப்போரூரை அடுத்த சிறுதாவூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். அங்கு தெப்பக்குளம் அருகில் உள்ள ரே‌ஷன் கடைக்கு சசிகலாவின் தாய், தனது பேரன், பேத்தியை அழைத்துச்சென்றார்.

ரே‌ஷன் கடையில் பொருட்கள் வாங்கி கொண்டு பேத்தியுடன் திரும்பும் போது தனது பேரன் ரித்தீஷ் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த பகுதி முழுவதும் தேடியும் கிடைக்காததால் ரித்தீசை யாராவது கடத்தி இருக்கலாம் என திருப்போரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டேர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவனை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை தெப்ப குளத்தில் ரித்தீஷ் பிணமாக மிதந்தான். இதை கண்ட அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ரித்தீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ரே‌ஷன் கடைக்கு பாட்டியுடன் வந்த ரித்தீஷ், அங்கு விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக குளத்தில் தவறி விழுந்து இறந்து இருப்பது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்