பாலில் கலப்படத்தை இலவசமாக கண்டறிய சிறப்பு முகாம்

பாதுகாப்பான உணவை நுகர்வோருக்கு வழங்குவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் உணவு பாதுகாப்பு துறை செயல்பட்டு வருகிறது.;

Update:2018-02-20 04:00 IST
தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட கலெக்டர் விவேகானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பாதுகாப்பான உணவை நுகர்வோருக்கு வழங்குவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் உணவு பாதுகாப்பு துறை செயல்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பாலில் உள்ள கலப்படத்தை கண்டறிவதற்கான சிறப்பு முகாம் இன்று (செவ்வாய்க் கிழமை) தொடங்குகிறது. தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை 6 மணி முதல் 10 மணிவரை நடக்கிறது. பொதுமக்கள் ½ லிட்டர் முதல் 1 லிட்டர் வரை பாலை தூய்மையான பாத்திரத்தில் முகாமிற்கு கொண்டு வந்து பாலின் தரத்தை இலவசமாக பரிசோதித்து கொள்ளலாம்.

இதேபோல் நாளை (புதன்கிழமை) நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பாலில் கலப்படத்தை கண்டறிவதற்கான சிறப்பு முகாம் நடக்கிறது. வருகிற 24-ந்தேதி (சனிக்கிழமை) காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், வருகிற 26-ந்தேதி பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், வருகிற 27-ந் தேதி பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் இந்த முகாம் நடக்கிறது. அந்தந்த நாட்களில் குறிப்பிட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் 10 மணிவரை நடைபெறும் சிறப்பு முகாமில் பொதுமக்கள் பங்கேற்று தாங்கள் பயன்படுத்தும் பாலின் தரத்தை அறிந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்