விபத்தை விலைக்கு வாங்கலாமா?

அரசு சாலைகளை பராமரிக்க மறப்பதும், மனிதன் போக்குவரத்து விதிகளை பின்பற்ற மறுப்பதும் வாகன விபத்து நேர்வதற்கு காரணமாகி விடுகின்றன.;

Update:2018-03-27 11:45 IST
கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் நடந்த விபத்துகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கி இருந்தது. இந்த விபத்துகள், 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் உயிரை மாய்த்தது.

இங்கே கொடுமை என்னவென்றால், இந்தியாவில் நடக்கும் 33 சதவீதம் விபத்துகளுக்கு 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்கள் தான் காரணம் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. அதுமட்டுமின்றி, 27 சதவீதம் சிறுவர்கள் மற்றும் 18 வயது நிரம்பாத இளவயதினர் போதையில் வாகனங்களை ஓட்டி விபத்துக்கு காரணமாக திகழ்கிறார்களாம்.

சட்டப்படி 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தான் மோட்டார் வாகனங்களை ஓட்ட முடியும். அதற்கு ஓட்டுனர் உரிமம் பெற வேண்டியது அவசியம். ஆனால், இன்றைக்கு ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான வயதை அடையாத சிறுவர், சிறுமியர்கள் கூட அசுர வேகத்தில் இருசக்கர வாகனங்களில் பறக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் மொபட், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிளில்தான் பள்ளிகளுக்கே செல்கிறார்கள். போதிய அனுபவமின்றி வாகனங்களை ஓட்டுவதும், போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்காததும் விபத்துகள் ஏற்பட காரணமாக இருக்கின்றன. பெற்றோரும் பள்ளி செல்லும் தங்கள் பிள்ளைகள் கேட்கும் வாகனங்களை வாங்கி தர தயாராக இருக்கிறார்கள். இது விபத்தை விலைக்கு வாங்குவதற்கு சமம்.

நம் பிள்ளைகளின் உயிரும், அவர்களால் மற்றவர்களின் உயிரும் பறிபோகாமல் இருப்பது அவசியமல்லவா? எனவே, உரிய வயது வந்த பிறகு, முறையான பயிற்சிக்கு பின்பு, ஓட்டுனர் உரிமம் பெற்ற பிறகு தங்கள் குழந்தைகளுக்கு மோட்டார் வாகனங்களை வாங்கி கொடுக்க பெற்றோர் முன்வர வேண்டும்.

நாம் மாறாவிட்டால், நம்மை மாற்ற மோட்டார் வாகன சட்டத்தில் இடம் உள்ளது. ஆம், 18 வயது பூர்த்தியாகாதவர்கள் மோட்டார் வாகனங்களை ஓட்டினால், அவர்களை ஓட்ட அனுமதித்த பெற்றோர், வாகன உரிமையாளர்களுக்கு 3 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. கோடை விடுமுறை தொடங்க இருக்கும் நிலையில், அந்த சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். அதற்கு முன் நாம் மாறுவோம்.

-மாசு

மேலும் செய்திகள்