கடையம் அருகே பரிதாபம் கிணற்றில் தவறி விழுந்து கிராம நிர்வாக அதிகாரி சாவு

கிணற்றில் தவறி விழுந்து கிராம நிர்வாக அதிகாரி இறப்பு குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-04-05 23:26 GMT
கடையம்,

கடையம் அருகே கிணற்றில் தவறி விழுந்து கிராம நிர்வாக அதிகாரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாளையங்கோட்டை தியாகராஜநகரை சேர்ந்த அருணாசலம் மகன் பாலரவிசங்கர் (வயது 32). இவர் மானூர் தாலுகா செழியநல்லூரில் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.

இவர், நேற்று தனது நண்பர்கள் பாளையங்கோட்டையை சேர்ந்த வள்ளிமுருகன், சாந்திநகரை சேர்ந்த பிரவீன், பிரதீப், கே.டி.சி. நகரை சேர்ந்த அருண்குமார் ஆகியோருடன் நேற்று கடையத்துக்கு வந்தனர். அப்போது கடையம் பகுதியில் உள்ள நண்பர் ஒருவருடன் சேர்ந்து சிவநாடானூரில் ஒரு தோட்டத்தில் சோறு பொங்கி சாப்பிட்டனர்.

அதன்பிறகு பாலரவிசங்கர் குளிப்பதற்காக அந்த தோட்டத்து கிணற்றில் இறங்கியதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்று படிக்கட்டில் இருந்து பாலரவிசங்கர் தவறி கிணற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு நீச்சல் தெரியாததால் கிணற்று நீரில் தத்தளித்தார். இதைக்கண்டு அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே பாலரவிசங்கரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ஆலங்குளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பாலரவிசங்கரின் உடலை மீட்டனர். அவரது உடலை பார்த்து நண்பர்கள் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

தகவல் அறிந்த ஆழ்வார்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முகம்மது இப்ராகிம் மற்றும் போலீசார் பாலரவிசங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாலரவிசங்கருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 3½ வயதில் அஜிதா என்ற மகளும் உள்ளனர். விஜயலட்சுமி சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். பாலரவிசங்கர், அவரது பெற்றோருக்கு ஒரே மகன் ஆவார். அவரது உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. கிணற்றில் தவறி விழுந்து கிராம நிர்வாக அதிகாரி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்