ஐ.பி.எல். நடக்கும் புனே கிரிக்கெட் மைதானத்துக்கு தண்ணீர் வழங்க கூடாது

பாவ்னா அணையில் இருந்து ஐ.பி.எல். போட்டி நடக்கும் புனே கிரிக்கெட் மைதானத்திற்கு தண்ணீர் வழங்க கூடாது என மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-04-19 23:59 GMT
மும்பை,

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடந்து வரும் போராட்டம் காரணமாக சென்னையில் நடைபெற இருந்த ஐ.பி.எல். போட்டிகள் மராட்டிய மாநிலம் புனேக்கு மாற்றப்பட்டன.

இந்தநிலையில் மும்பை ஐகோர்ட்டில் பொது நலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் புனேயில் உள்ள பாவ்னா அணையில் இருந்து ஐ.பி.எல். போட்டி நடைபெறும் மைதானத்திற்கு தண்ணீர் வழங்கப்பட கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் அபய் ஒகா மற்றும் ரியாஸ் சக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது.

விசாரணையின் போது நீதிபதிகள், மராட்டிய மாநில கிரிக்கெட் வாரியம் எந்த தொழிற்சாலையை நடத்துகிறது. எந்த அடிப்படையில் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுவதாக குறிப்பிட்டு மைதானங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது என அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

மேலும் நீதிபதிகள், பாவ்னா அணையில் இருந்து புனே கிரிக்கெட் மைதானத்திற்கு 2 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்குவது தொடர்பாக மராட்டிய கிரிக்கெட் வாரியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மாநில அரசு புதுப்பிக்க கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

மேலும் செய்திகள்