மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றுவதில் புதுச்சேரி மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது, நாராயணசாமி பெருமிதம்

மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றுவதில் இந்தியாவில் உள்ள சிறிய மாநிலங்களில் புதுச்சேரி முதலிடத்தை பிடித்துள்ளது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி பெருமிதத்துடன் கூறினார்.;

Update:2018-04-21 04:45 IST
மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றுவதில் புதுச்சேரி மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது, நாராயணசாமி பெருமிதம்
கரையாம்புத்தூர்,

மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சகம் மூலம் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு பிரதம மந்திரியின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் புதுச்சேரி மாநிலம் மணமேடு கிராமத்தில் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் விழா நேற்று காலை நடைபெற்றது.

மணமேடு கிராமத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடந்த இந்த விழாவுக்கு அமைச்சர் கந்தசாமி, விஜயவேணி எம்.எல்.ஏ., இந்தியன் ஆயில் நிறுவன மண்டல அதிகாரிகள் செந்தில்குமார், பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 50 பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகளையும், எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அடுப்புகளையும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது புதுவையில் 98 சதவீதம் பேருக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டது. தற்போது மீதமுள்ள 2 சதவீதம் பேருக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் விறகு அடுப்பு வைத்து சமைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அதனை தவிர்க்க எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது.

மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் இந்தியாவில் உள்ள 17 சிறிய மாநிலங்களில் புதுச்சேரி மாநிலம் முதலிடத்தை பிடித்து உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் சிவப்பு நிற ரேஷன் கார்டுகளுக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. மஞ்சள் நிற ரேஷன் கார்டு தாரர்களுக்கு இந்த வாரத்திலேயே இலவச அரிசி வழங்கப்படும். மேலும் முதியோர் உதவி தொகை, சென்டாக் கல்வி உதவி தொகைகளும் விரைவில் வழங்கப்படும்.

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் கூடுதலாக 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும். நிதி நெருக்கடி இருந்தபோதிலும் மருத்துவம், கல்வி மற்றும் சட்டம்-ஒழுங்கை காக்கும் பணி ஆகியவற்றில் புதுச்சேரி மாநிலம் சிறந்து விளங்குகிறது.

இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

இதேபோல் கிருமாம்பாக்கம், சேலியமேடு, பரிக்கல்பட்டு, அபிஷேகப்பாக்கம் உள்பட 10 இடங்களில் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அமைச்சர் கந்தசாமி இலவச சமையல் எரிவாயு இணைப்பு மற்றும் எரிவாயு அடுப்பு ஆகியவற்றை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. விரைவில் அது செயல்படுத்தப்படும். கவர்னர் கிரண்பெடியிடம் நானும் (அமைச்சர் கந்தசாமி), முதல்-அமைச்சரும் பேசி இலவச அரிசி திட்டத்தை அனைத்து குடும்பத்தினருக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் 3 மாதங்கள் இலவச அரிசி வழங்க கவர்னர் அனுமதி அளித்துள்ளார். பின்பு இலவச அரிசி திட்டத்தை ஏழை மக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும், அதற்கான நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி குருப் ஏ, பி நிலை அரசு அதிகாரிகளுக்கு இலவச அரிசி வழங்கப்படமாட்டாது. மேலும் தனியார் நிறுவன அதிகாரிகளும் தானாக முன்வந்து இத்திட்டத்தில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும். இலவச அரிசி தரமானதாக வழங்கப்படும். இன்னும் 3 தினங்களில் இலவச அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சமையல் எரிவாயு இணைப்பை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து சமூக ஆர்வலர் பிரேமா விளக்கி பேசினார்.

தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாலமுரளி மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்