திருச்சி அருகே கடையின் மேற்கூரையை உடைத்து 36 செல்போன்கள் திருட்டு
திருச்சி அருகே கடையின் மேற்கூரையை உடைத்து 36 செல்போன்கள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
திருச்சி
திருச்சி வாத்தலை அருகே உள்ள சிறுகாம்பூர் செட்டியார் தெருவை சேர்ந்தவர் துரைசாமி செட்டியார். இவரது மகன் சந்திரசேகர் (வயது 43). இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருச்சி-சேலம் மெயின் ரோடு அருகில் சிறுகாம்பூர் பிரிவு சாலையில் செல்போன் விற்பனை கடை ஆரம்பித்து நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு விற்பனை நேரம் முடிந்ததும் சந்திரசேகர் கடையின் கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். மறுநாள் காலை வழக்கம் போல் கடைக்கு வந்த அவர் கடையின் கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது கடையினுள் அலமாரிகளில் அடுக்கி வைத்திருந்த செல்போன்கள் அனைத்தும் காணாமல் போய் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனைத்தொடர்ந்து அவர் கடை முழுவதும் பார்வையிட்டபோது கடையின் மேற்கூரை தகரம் உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. கடையின் மேற்கூரையை உடைத்து, அதன் வழியாக மர்ம நபர்கள் உள்ளே புகுந்து செல்போன்களை திருடிச்சென்றது சந்திரசேகருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து அவர் வாத்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருட்டு சம்பவம் நடந்த செல்போன் கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் நள்ளிரவில் ஆள் நடமாட்டம் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் கடையின் மேற்கூரையின் தகரத்தை இரும்பு பொருட்களை கொண்டு நெம்பி அதன் வழியாக கடையினுள் சென்று இந்த திருட்டு சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 36 செல்போன்கள் திருட்டு போய் இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.