சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருச்சியில் நடந்த சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Update: 2018-04-23 23:00 GMT
திருச்சி,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்(கும்பகோணம் லிட்.,) திருச்சி மண்டலம் மற்றும் அரசு போக்குவரத்து துறை சார்பில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழா திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது.

விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு, புகைப்படக் கண்காட்சி, விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வில்லைகளை பஸ்களில் ஒட்டினர். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், எம்.பி.க்கள் குமார், ரத்தினவேல், துணை போக்குவரத்து கமிஷனர் உமாசக்தி, ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் காளியப்பன், போக்குவரத்துக்கழக துணை மேலாளர்கள் ராஜ்மோகன், சிங்காரவேலு, கோட்ட மேலாளர் வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசுகையில், “திருச்சியில் உள்ள 13 பணிமனைகளில் 1,084 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் தினமும் 8 லட்சத்து 55 ஆயிரம் பயணிகள் செல்கிறார்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சாலை விபத்துக்களில் உயிரிழப்பு குறைந்துள்ளது. நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 3 மணிக்குள் நடைபெறும் விபத்துக்கள் மூலம் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. தமிழக அரசு சாலை விபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்அடிப்படையில் ஓட்டுனர்களுக்கு யோகா பயிற்சி, புத்தாக்க பயிற்சி, விபத்து தடுப்பு பயிற்சி போன்றவை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

விழிப்புணர்வு ஊர்வலம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஜங்ஷன், பாரதியார் சாலை வழியாக சென்று மாநகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. 

மேலும் செய்திகள்