தமிழகத்தில் பா.ஜ.க.ஆட்சி அமைக்காது மனித சங்கிலி போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேட்டி

‘கடலில் பிரளயம் ஏற்பட்டு இமயமலை தூள் தூளானாலும் தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்காது’ என்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

Update: 2018-04-23 23:07 GMT
வேலூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று வேலூர் கோட்டை காந்தி சிலை அருகே மனிதசங்கிலி போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான துரைமுருகன் தலைமை தாங்கினார்.

மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், காந்தி, நல்லதம்பி மற்றும் ம.தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் போன்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர். காந்திசிலையில் இருந்து தலைமைதபால் நிலையம் வரை நீண்ட வரிசையில் ஒருவருக்கொருவர் கைகோர்த்தபடி மனித சங்கிலியாக நின்றனர். பின்னர் துரைமுருகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த போராட்டத்திற்கு பிறகும் அரசு செவிசாய்க்காவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். மத்திய அரசுக்கு ஒரு அதிர்ச்சி(ஷாக்) கொடுக்க வேண்டுமானால் எடப்பாடி பழனிசாமி அரசு ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மத்திய அரசுடன் சேர்ந்து தமிழக மக்களை வஞ்சிப்பதாக தான் இருக்கும். இந்த ஜென்மத்தில் எடப்பாடி அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். காவிரியில் தண்ணீர் வந்தால் தான் வேலூருக்கே குடிநீர். காவிரி நீர்பாசனத்திற்காக மட்டும் அல்ல, குடிநீருக்காகவும் பயன்படுகிறது. வன்முறையில் நாட்டம் இல்லாத கட்சி தி.மு.க. கட்சியாகும். ஜனநாயக முறையில் போராடுவதால் வெற்றி பெற கொஞ்சம் கால தாமதம் ஆகும்.

வன்முறை போராட்டம் உடனடியாக கூட பலன்கொடுக்கும். ஆனால் நீண்ட நாள் நிற்காது. பிரதமருக்கு கருப்பு கொடி காட்டியதை பிரதானமாக செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு நன்றி. தமிழகத்தில் நடைபெற்ற கருப்பு கொடி போராட்டம் மோடிக்கு பின்னடைவாகும். கடலில் பிரளயம் ஏற்பட்டு இமயமலை தூள் தூளானாலும் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சியமைக்காது. கருப்பு கொடி போராட்டத்தால் மோடியின் செல்வாக்கு தேசிய அளவில் குறைந்துள்ளது. நிச்சயம் இது வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நேற்று காலை வேலூர் பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும் அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:-

தி.மு.க. நடத்தும் மனித சங்கிலி வெற்றிபெறுகிறதா?, தோல்வியடைகிறதா? என்பது முக்கியமல்ல. எதிர்ப்பை காட்டும் அடையாளமாகத்தான் நடத்தப்படுகிறது. தேசிய கட்சிகள் தமிழ்நாட்டில் காலூன்றவோ, வெற்றிபெறவோ முடியாது. இங்கு அண்ணாவின் பெயரை சொல்லும் கட்சிதான் வெற்றி பெறும். கேரளாவில் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சிகள் மாறி, மாறி ஆட்சி செய்கின்றன. ஆந்திரா, தெலுங்கானாவில் பாரதீய ஜனதாவால் காலூன்ற முடியாது. எனவே தான் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க முயற்சி செய்கிறது.

பாலியல் வன்முறைகள் வன்மையை தூண்டுகிறது. பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு தூக்குதண்டனை வழங்கவேண்டும் என்ற கருத்து அனைவரிடமும் உள்ளது. தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசர சட்டத்தை வரவேற்கிறோம்.

தமிழ்நாட்டில் உயர்கல்வியில் பாலியல் விவகாரம் அதிகரித்துள்ளது. அதை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. இதனால் தமிழகத்திற்கு தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது. கல்லூரி பேராசிரியையே மாணவிகளை பாலியலுக்கு அழைத்து புரோக்கர் வேலை பார்த்துள்ளார்.

தமிழக அரசு பேசாமல் இருப்பதை பார்த்தால் ஆளுங்கட்சியை சேர்ந்த யாருக்காவது இதில் தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகம் எழுகிறது. தமிழக கவர்னர் அவருக்கான எல்லைக்குள் இருக்கவேண்டும். அதுதான் அவருக்கு நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்