சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலையில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2018-04-23 23:37 GMT
திருவண்ணாமலை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை மற்றும் போக்குவரத்துக்கழகம் சார்பில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நேற்று திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் இருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்தை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் ஈசான்ய மைதானத்தில் தொடங்கி திருவண்ணாமலை நகராட்சி மத்திய பஸ் நிலையம், பெரியார் சிலை, அண்ணா சிலை, காந்தி சிலை, சின்னக் கடை தெரு வழியாக மறுபடியும் மத்திய பஸ் நிலையம் வழியாக ஈசான்ய மைதானத்தில் நிறைவடைந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கலந்து கொண்டன.

ஊர்வலத்தில் சென்றவர்கள் தலைக்கவசம் அணிவது, செல்போன் பேசி கொண்டு வாகனங்கள் ஓட்ட கூடாது, மது அருந்தி வாகனம் ஓட்டகூடாது, வேகமாக செல்ல கூடாது, சீட் பெல்ட் அணிவது, படியில் பயணம் செய்ய கூடாது, சிவப்பு விளக்கை மதிப்பது, சாலை விதிகளை கடைபிடிப்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முன்னதாக கலெக்டர் நடமாடும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி பஸ்சையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவாளிபிரியா, வட்டார போக்குவரத்து அலுவலர் சவுந்திரராசு, போக்குவரத்து ஆய்வாளர்கள் ராம்குமார், முருகேசன், ராமரத்தினம், திருவண்ணாமலை மண்டல பொது மேலாளர் நடராஜன், அரசு அலுவலர்கள், போலீசார், ஊர்க்காவல் படை, போக்குவரத்துக் கழக பஸ் டிரைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்