தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் கலெக்டர் மலர்விழி கலந்து கொண்டார்

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் அனுமந்தபுரத்தில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி கலந்து கொண்டார்.

Update: 2018-04-24 22:45 GMT
தர்மபுரி,

தர்்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் அனுமந்தபுரத்தில் கடந்த 18-ம் தேதி முதல் கிராம சுயாட்சி இயக்கம் சார்பில் பல்வேறு அரசு திட்டங்கள் குறித்து நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று அனுமந்தபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் மாவட்ட கலெக்டர் எஸ்.மலர்விழி தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

தர்மபுரி மாவட்ட கலால் மற்றும் ஆயத்தீர்வை உதவி கமிஷனர் மல்லிகா, காரிமங்கலம் தாசில்தார் ரேவதி, காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடரமணன், வடிவேலன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அனுராதா, வட்டார குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் சுகந்தப்ரியா, மற்றும் பல்வேறு துறைச்சார்ந்த அலுவலர்கள், அனுமந்தபுரம் ஊராட்சி செயலாளர் மூர்த்தி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாளையம்புதூர், பாகலஅள்ளி உள் ளிட்ட 32 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. பாளையம்புதூர் கிராம ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு பார்வையாளராக ஊராட்சி ஒன்றிய உதவியாளர் முத்துக்குமார் கலந்து கொண்டு பேசினார்.

இதேபோல் பாகலஅள்ளி ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் திருவருட்செல்வன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு பார்வையாளராக ஊராட்சி ஒன்றிய உதவியாளர் செல்வி கலந்து கொண்டு பேசினார். நல்லம்பள்ளி ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு பார்வையாளராக தாசில்தார் பழனியம்மாள் கலந்து கொண்டு பேசினார். அதியமான்கோட்டையில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் பிரகாசம் தலைமை தாங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயந்தி, மதலைமுத்து ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 

மேலும் செய்திகள்