மும்பை மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக ரூ.28 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது
மும்பை மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக ரூ.28 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை,
மும்பை மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக ரூ.28 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரூ.28 லட்சம் மோசடி
தானே, திவா பகுதியை சேர்ந்தவர் சச்சின். இவர் சமீபத்தில் தாதர் சிவாஜி பார்க் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்து இருந்தார். அந்த புகாரில் கூறப்பட்டு இருந்ததாவது:-
காலாசவுக்கி பகுதியை சேர்ந்த லத்திகேஷ்(வயது26) என்பவர் மும்பை மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக கூறி என்னிடமும், எனது நண்பர்கள் 4 பேரிடமும் ரூ.28 லட்சம் வரை வாங்கினார். ஆனால் அவர் சொன்னது போல வேலை வாங்கி தரவில்லை.
தற்போது பணத்தை தராமல் தலைமறைவாக உள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
வாலிபர் கைது
இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லத்திகேசை தேடிவந்தனர். இந்தநிலையில் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மோசடி பணத்தை பார் அழகிகளுக்கு செலவழித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது.
மேலும் லத்திகேஷ் வேறு யாரிடமாவது மோசடியில் ஈடுபட்டாரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.