மது அருந்தியதை தட்டிக்கேட்ட விவசாயிக்கு பீர்பாட்டில் குத்து 2 வாலிபர்கள் கைது
பள்ளி வளாகத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட விவசாயியை பீர்பாட்டிலால் குத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
அரசூர்
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சரவணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி (வயது 30), விவசாயி.
இவர் நேற்று முன்தினம் இரவு வெளியே நடந்து சென்றார். அப்போது அங்குள்ள அரசு பள்ளிக்கூட வளாகத்தில் அதே கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமன் (24), பிரசாந்த் (21) உள்பட 4 வாலிபர்கள் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர்.
இதை பார்த்த கோபி, அவர்கள் 4 பேரிடமும் சென்று பள்ளி வளாகத்தில் அமர்ந்து மது அருந்தாதீர்கள், இங்கிருந்து உடனே செல்லுங் கள் என்று கூறியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த அவர்கள் 4 பேரும் சேர்ந்து பீர்பாட்டிலால் கோபியின் தலையில் குத்தினர். இதில் படுகாயமடைந்த கோபியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து புருஷோத்தமன், பிரசாந்த் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.