அனுமதியின்றி செங்கல் சூளை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை - கலெக்டர் சுரேஷ்குமார் எச்சரிக்கை

அனுமதியின்றி செங்கல் சூளை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை கலெக்டர் சுரேஷ்குமார் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2018-05-04 23:30 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் அனுமதியின்றி செங்கல் சூளை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மாவட்ட கலெக்டரின் அனுமதி பெறாமல் செங்கல் சூளை நடத்தப்பட்டு வருவதாகவும், இதற்காக மண் அனுமதி பெறாமல் திருட்டுத்தனமாக எடுத்து செல்லப்படுவதாகவும் புகார் வருகிறது.

செங்கல் சூளை நடத்த பதிவு கட்டணமாக ரூ.300-ம், மனு கட்டணமாக ரூ.1,500-ம், சூளைக்கான மண்ணுக்குரிய தொகை ஆண்டு ஒன்றுக்கு ரூ.12 ஆயிரமும் செலுத்தப்பட வேண்டும். மேற்படி தொகையை செலுத்தாமலும், முறையாக அனுமதி பெறாமலும் செங்கல் சூளை நடத்துபவர்கள் பெயர் மற்றும் சூளை போடப்பட்டுள்ள இடம் குறித்த விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்க நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

செங்கல் சூளை நடத்த அனுமதி பெறாதவர்கள் உடனடியாக நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு பதிவுக் கட்டணம், மனுக்கட்டணம் மற்றும் மண்ணுக்குரிய தொகை முதலியவற்றை அரசுக்கு செலுத்தி முறையாக அனுமதி பெற வேண்டும். அரசு அனுமதியின்றி செங்கல் சூளை நடத்தினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்