திண்டுக்கல்லில் பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

திண்டுக்கல்லில் பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

Update: 2018-05-05 22:30 GMT
திண்டுக்கல்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், கிராம சுயாட்சி இயக்கம் மற்றும் ‘ஆஜிவிகா விகாஸ் மேளா’ குறித்து பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதற்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

‘தீன் தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா’ திட்டத்தின் கீழ் ‘கவுசல் பஞ்சி’ என்ற செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் இளைஞர்கள் தங்களுடைய சுய விவரங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் குறித்த விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம். ஊரக வாழ்வாதார இயக்கம் மூலமாக மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு மத்திய, மாநில அரசு சார்பில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வங்கிகள் மூலமாக தொழிற்கடன், தனிநபர் கடன், சமுதாய முதலீட்டு நிதி என பல்வேறு கடனுதவிகளை மானியத்துடன் வழங்கி வருகிறது. இதனை பெற மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட தொழில் மைய அலுவலர்களை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். கருத்தரங்கில் 34 பயனாளிகளுக்கு ரூ.49 லட்சத்து 80 ஆயிரம் கடன் உதவி செய்யப்பட்டது. மேலும் கணினி, தையல் மற்றும் கோழி வளர்ப்பு பயிற்சி பெற்ற 244 பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் கருப்பையா, ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சிவக்குமார், மாவட்ட தொழில் மைய மேலாளர் ராமலிங்கம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்