வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண் கைது சாராயம் விற்ற பெண்ணும் சிக்கினார்

கூத்தாநல்லூரில், வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும், சாராயம் விற்ற பெண்ணும் சிக்கினார்.

Update: 2018-05-20 22:15 GMT
கூத்தாநல்லூர்,

கூத்தாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் கூத்தாநல்லூர் பகுதிகளில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லெட்சுமாங்குடியில் உள்ள மரக்கடை என்ற இடத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மரக்கடையில் உள்ள துரைபாண்டி மனைவி ஜெயமணி (வயது 58) என்பவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் அந்த வீட்டில் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பெண் கைது

இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயமணியை கைது செய்தனர். இதேபோல் கோரையாறு பகுதியில் அனுமதியின்றி புதுச்சேரி மாநில சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி லலிதா (58) என்பவரிடம் 110 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லலிதாவை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்