தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழ் தேச மக்கள் முன்னணியினர் சாலை மறியல்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தஞ்சையில் தமிழ் தேச மக்கள் முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பஸ்சுக்கு அடியில் படுத்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-05-23 23:00 GMT
தஞ்சாவூர்,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்தும், துப்பாக்கி சூடு நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழ் தேச மக்கள் முன்னணியினர் தஞ்சை கரந்தை வடவாறு பாலம் அருகே நேற்றுமாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயலாளர் அருண்சோரி தலைமை தாங்கினார். மறியல் போராட்டத்தினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதை அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரெத்தினவேலு தலைமையில் அதிரடிபடையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயற்சி செய்தனர். அப்போது வடவாறு பாலம் அருகே நின்று கொண்டிருந்த

அரசு பஸ்சுக்கு அடியில் 5 இளைஞர்கள் படுத்து கொண்டனர். இவர்களை வெளியே வர கூறி அதிரடிபடையினர் வலியுறுத்தினர்.


ஆனால் அவர்கள் பஸ்சுக்கு அடியில் இருந்து வெளியே வர மறுத்துவிட்டனர். இதனால் அவர்களை அதிரடிபடையினர் தர, தரவென இழுத்து சென்று வேனில் ஏற்றினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டனர். சாலை மறியலால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்கிறார்களா? என தஞ்சை முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தஞ்சை பழைய பஸ் நிலையம், ரெயிலடி போன்ற முக்கியமான இடங்களில் அதிரடிபடையினர் குவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்