பழனி கோவில் சிலை மோசடி வழக்கில் ஓய்வு பெற்ற அறநிலையத்துறை கமிஷனருக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது: மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பு எதிர்ப்பு

ஓய்வு பெற்ற அறநிலையத்துறை கமிஷனருக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது என மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

Update: 2018-05-24 01:43 GMT
மதுரை,

பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு தங்கச்சிலை செய்ததில் நடைபெற்ற மோசடி குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் ஸ்தபதி முத்தையா, அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட பலர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் அறநிலையத்துறை கமிஷனராக பணியாற்றி ஓய்வு பெற்ற தனபால் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு அவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், “இந்த வழக்கில் 3-வது எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளேன். சிலை மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. சிலை தயாரித்ததில் தவறு நடந்ததாக கூறுகிறார்கள். ஆனால் நேரடியாக என் மீது குற்றம் சாட்டப்படவில்லை. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்“ என்று கூறியிருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் இந்த மனு நீதிபதி டி.கிருஷ்ணவள்ளி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கமிஷனராக இருந்த போது தான் பழனி கோவில் சிலை செய்யப்பட்டுள்ளது. எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டி உள்ளது. அதனால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முடிவில் இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்