ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சாலை மறியல்: 2 பக்தர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

வத்தலக்குண்டு காளியம்மன் கோவிலில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பக்தர்கள் 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-06-13 23:30 GMT
வத்தலக்குண்டு,

வத்தலக்குண்டு நகரில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. இந்தநிலையில் இந்த கோவிலில் உள்ள அன்னதான கூடத்தை ஆஸ்பெட்டாஸ் ஷீட்டால் கட்டப்பட்டு இருந்தது.

இதையடுத்து அதை இடித்து விட்டு, புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டிடம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் அந்த இடத்தை சிலர், ஆக்கிரமித்து கடை வைத்திருப்பதாக புகார் எழுந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த பக்தர்கள், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் பக்தர்கள் நேற்று காளியம்மன் கோவில் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கோவிலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே மறியலில் ஈடுபட்ட பக்தர்கள் கோபி, கண்ணன் ஆகியோர் திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் வத்தலக்குண்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் 2 பேரிடமும் இருந்து மண்எண்ணெய் கேனை பிடுங்கினர்.

இதற்கிடையே மறியலில் ஈடுபட்ட பக்தர்களிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் உதவியுடன் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி கூறினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்படும் இடங்களை சுற்றிலும் பக்தர்கள் தகரத்தை வைத்து அடைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்