‘அவன்–இவன்’ பட வழக்கு: இயக்குனர் பாலா, நடிகர் ஆர்யாவுக்கு பிடிவாரண்டு அம்பை கோர்ட்டு உத்தரவு

‘அவன்–இவன்‘ சினிமா பட வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இயக்குனர் பாலா, நடிகர் ஆர்யா ஆகியோருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து அம்பை கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2018-06-30 21:00 GMT

அம்பை,

‘அவன்–இவன்‘ சினிமா பட வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இயக்குனர் பாலா, நடிகர் ஆர்யா ஆகியோருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து அம்பை கோர்ட்டு உத்தரவிட்டது.

பாலா–ஆர்யா மீது வழக்கு

நடிகர்கள் ஆர்யா–விஷால் இணைந்து நடித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் ‘அவன்–இவன்’. இந்த படத்தை கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் இயக்குனர் பாலா இயக்கி இருந்தார்.

இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீன்தார் தீர்த்தபதி ராஜா மற்றும் சொரிமுத்து அய்யனார் கோவிலை தரக்குறைவாக சித்தரித்து காட்டி இருப்பதாக புகார் தெரிவித்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி ஜமீன்தார் மகன் சங்கர் ஆத்மஜன் அம்பை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

குற்றப்பத்திரிக்கை

கடந்த 20–ந்தேதி கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இயக்குனர் பாலா, நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் ஆகியோர் ஆஜரானார்கள். கல்பாத்தி அகோரம் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். அன்றைய தினம் பாலா, ஆர்யாவுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.

பிடிவாரண்டு

இந்த வழக்கு அம்பை குற்றவியல் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாலா, ஆர்யா ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் கோர்ட்டில் வக்கீல் வாய்தா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி முரளிதரன், வழக்கு விசாரணையை ஜூலை 13–ந் தேதிக்கு ஒத்திவைத்தும், இயக்குனர் பாலா, நடிகர் ஆர்யா ஆகியோருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தும் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்