பெரும்பாலை அருகே ஓட்டல் தொழிலாளி வீட்டில் பூட்டை உடைத்து நகை–பணம் திருட்டு
பெரும்பாலை அருகே ஓட்டல் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
ஏரியூர்,
பெரும்பாலை அருகே உள்ள ஆலாமரத்தூர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 43). இவர் காரிமங்கலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் உறவினர் வீட்டு திருமணத்திற்காக ஆலாமரத்தூரில் உள்ள வீட்டில் இருந்து பெரும்பாலைக்கு வெண்ணிலா மற்றும் குழந்தைகள் நேற்று முன்தினம் சென்றனர். பின்னர் அவர்கள் நேற்று வீட்டுக்கு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 9 பவுன் நகை மற்றும் ரூ.27 ஆயிரம் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வெண்ணிலா பெரும்பாலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.