கட்டாலங்குளம் வீரன் அழகுமுத்துகோன் மணிமண்டபத்தில் போலீஸ் ஐ.ஜி. ஆய்வு

கோவில்பட்டி அருகே கட்டாலங்குளம் வீரன் அழகுமுத்துகோன் மணிமண்டபத்தில் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முக ராஜேசுவரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2018-07-04 19:06 GMT
கோவில்பட்டி,

வீரன் அழகுமுத்துகோனின் 308-வது பிறந்தநாள் விழா, அவர் பிறந்த ஊரான கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் வருகிற 11-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. அங்குள்ள வீரன் அழகுமுத்துகோன் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.

இதையொட்டி கட்டாலங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துகோன் மணிமண்டபத்தை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முக ராஜேசுவரன், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் மற்றும் போலீசார் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


பின்னர் போலீஸ் ஐ.ஜி. சண்முக ராஜேசுவரன் தலைமையில், மணிமண்டப வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் வீரன் அழகுமுத்துகோன் நலச்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

பின்னர் போலீஸ் ஐ.ஜி. சண்முக ராஜேசுவரன் கூறுகையில், ‘வீரன் அழகுமுத்துகோன் பிறந்தநாள் விழாவுக்கு வரும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் வழக்கம்போல் தொடரும். இந்த விழாவை அமைதியான முறையில் சிறப்பாக கொண்டாடுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் சட்டப்படி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது’ என்றார்.

மேலும் செய்திகள்