தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்த 3 மணி நேரத்தில் இளம்பெண் சாவு உறவினர்கள், டாக்டர்களிடம் வாக்குவாதம்

தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்த 3 மணிநேரத்தில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆவேசமடைந்த உறவினர்கள், டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-07-06 23:00 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள நல்லப்பநாயக்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி கோகிலா (வயது 21). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கோகிலா பிரசவத்திற்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று அதிகாலை 2½ மணிக்கு கோகிலாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு கோகிலாவிற்கு திடீரென ரத்தபோக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கோகிலா உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். அவர்கள் டாக்டர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபற்றி தகவல் அறிந்த அரசு மருத்துவகல்லூரி டீன் சீனிவாசராஜூ, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஸ்குமார் ஆகியோர் அங்கு வந்து கோகிலாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது உறவினர்கள் கூறுகையில், பாப்பாரப்பட்டி அருகே உள்ள ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணியாக இருந்தபோது கோகிலா தொடர் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிகிச்சை அளிப்பதில் ஏற்பட்ட குறைபாடே உயிரிழப்பிற்கு காரணம்.

இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி சரியான முறையில் சிகிச்சை அளிக்காதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று மருத்துவத்துறை அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்