மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில்

பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2018-07-18 22:00 GMT
வேலூர், 

வாணியம்பாடி தாலுகா கேத்தாண்டபட்டி அருகே உள்ள கூத்தாண்டர்குப்பத்தை சேர்ந்தவர் கருணா என்கிற கருணாகரன் (வயது 50), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந் தேதி, 8 வயது நிரம்பிய பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் அழுதபடி கூறினாள். இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கருணாகரனை கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை வேலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி செல்வம் விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் (‘போக்சோ’) சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் கருணாகரனுக்கு விதிக்கப்பட்டது.

மேலும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அபராதத்தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்ந்து நீதிபதி பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நிவாரணம் வழங்கும்படி வேலூர் மாவட்ட சட்ட உதவி மையத்துக்கு பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் லட்சுமிபிரியா ஆஜரானார்.

இதையடுத்து பலத்த காவலுடன் கருணாகரன் அழைத்து செல்லப்பட்டு வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். 

மேலும் செய்திகள்