கோட்டைப்பட்டினத்தில் விற்பனைக்காக கடத்தப்பட இருந்த 420 கடல் அட்டைகள் பறிமுதல் வியாபாரி கைது

கோட்டைப்பட்டினத்தில் விற்பனைக்காக கடத்தப்பட இருந்த 420 கடல் அட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், வியாபாரியை கைது செய்தனர்.

Update: 2018-07-19 23:00 GMT
மணமேல்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள கோட்டைப்பட்டினம் கடற்கரை பகுதியில் கடல் அட்டைகள் கடத்தி செல்லப்படுவதாக மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும சப்–இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், ரகுபதி, நுண்ணறிவு பிரிவு போலீசார் பாண்டியன், ரெங்கநாதன் ஆகியோர் கடற்கரைக்கு சென்று கண்காணித்தனர்.


அப்போது கடற்கரையில் சந்தேகப்படும்படியாக கையில் ஒரு பையுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த சுலைமான்(வயது 45) என்பதும், வியாபாரியான அவர் கையில் வைத்திருந்த பையில் அரசால் தடை செய்யப்பட்ட 420 கடல் அட்டைகள் இருந்ததும், தெரியவந்தது.

மேலும் மருத்துவ குணம் கொண்ட கடல் அட்டைகளை விற்பனைக்காக அவர் கடத்தி செல்ல வைத்திருந்ததும், தெரியவந்தது.


இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 420 கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். இதில் 40 கடல் அட்டைகள் உயிருடன் இருந்தன. அவற்றை போலீசார் கடலில் விட்டனர். மீதமுள்ள 380 கடல் அட்டைகளை போலீசார் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

வனத்துறையினர் அந்த கடல் அட்டைகளை கடற்கரையில் புதைத்தனர். மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்த கடல் அட்டைகளை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

மேலும் செய்திகள்