ஜெய்ஹிந்த்புரத்தில் ஆக்கிரமிப்புகளை 4 வாரத்தில் அகற்ற வேண்டும் மதுரை கலெக்டருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

ஜெய்ஹிந்த்புரத்தில் ஆக்கிரமிப்புகளை 4 வாரத்தில் அகற்ற கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-07-19 22:15 GMT
மதுரை,


மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘மதுரை மாவட்டம் தெற்கு தாலுகாவிற்கு உட்பட்ட ஜெய்ஹிந்த்புரம் என்.எஸ்.கே.நகரில் உள்ள 4 தெருக்களில் தனிநபர்கள் சிலர் அரசு இடத்தையும், நடைபாதைகளையும் ஆக்கிரமிப்பு செய்து சில கட்டிடங்களை கட்டியுள்ளனர்.

ஆக்கிரமிப்பு செய்த அரசு இடங்களுக்கு சட்டவிரோதமாக மின் இணைப்பு பெற்றுள்ளனர். நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்திருப்பதால் பொதுமக்கள் அந்த தெருக்களில் சென்று வர சிரமப்படுகின்றனர்.

ஆக்கிரமிப்பு காரணமாக 10 அடி நடைபாதையானது சுருங்கி தற்போது 5 அடியாக உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. எனது மனுவின் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.


இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்ய வக்கீல் கமிஷனரை நியமித்தது. அதன்படி வக்கீல் கமிஷனர் ஆய்வு செய்து, மனுதாரர் குறிப்பிடுவதை போல சம்பந்தப்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்புகள் நடந்திருப்பதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த வழக்கை நீதிபதிகள் துரைச்சாமி, அனிதாசுமந்த் ஆகியோர் விசாரித்து, ஜெய்ஹிந்த்புரம் என்.எஸ்.கே நகர் தெருக்களில் ஆக்கிரமிப்புகளை 4 வாரத்தில் அகற்ற மதுரை கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்