ஆரல்வாய்மொழி பேரூராட்சி அலுவலகத்தில் காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்

ஆரல்வாய்மொழி பேரூராட்சி அலுவலகத்தில் காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம் நடத்தினர்.;

Update:2018-08-01 04:30 IST
ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உள்பட்ட வடக்கூர் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த பல நாட்களாக குடிநீர் சுத்திகரிக்கும் கருவி பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், இந்த பகுதியில் சுத்தமான குடிநீர் வழங்கப்படவில்லை.  

எனவே, பழுதடைந்த சுத்திகரிக்கும் கருவியை சரி செய்து சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில், நேற்று காலையில் வடக்கூர் பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் காலிக்குடங்களுடன் ஆரல்வாய்மொழி பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்றனர். அவர்கள் சுத்தமான குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பா.ஜனதா மண்டல தலைவர் மாதேவன் பிள்ளை, வர்த்தக அணி தலைவர் சொக்கலிங்கம், கிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

போராட்டக்காரர்களிடம் பேரூராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஒரு வாரத்தில் சுத்திகரிப்பு கருவி சரிசெய்யப்பட்டு சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் பேரூராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்