நீடாமங்கலம் அருகே பள்ளி மாணவிகள் 3 பேர் விஷம் தின்றனர் ஆஸ்பத்திரியில் அனுமதி

நீடாமங்கலம் அருகே பள்ளி மாணவிகள் 3 பேர் விஷம் தின்றனர். இதனால் மயங்கிய நிலையில் இருந்த 3 பேரும் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Update: 2018-07-31 22:15 GMT
நீடாமங்கலம்,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஒரு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் 3 மாணவிகளை அதே பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவர்கள் 3 பேருடன் இணைத்து பள்ளி சுவரில் யாரோ மாணவர்கள் ஆபாசமாக எழுதி இருந்தனர். இதனால் மனம் வருந்திய அந்த 3 மாணவிகளும் நேற்று மதியம் எலி மருந்தை வாங்கி வைத்து பள்ளியிலேயே தின்றுள்ளனர்.

இதனால் அந்த மாணவிகள் 3 பேரும் மயங்கிய நிலையில் இருந்தனர். இதனை அறிந்த அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த மாணவிகள் 3 பேரையும் உடனடியாக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்