இந்திப்பட பாடகர் மிகா சிங் வீட்டில் ரூ.3 லட்சம் நகை, பணம் திருட்டு இசை கலைஞர் மீது வழக்குப்பதிவு

இந்திப்பட பாடகர் மிகா சிங் வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை திருடியதாக இசை கலைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2018-07-31 22:30 GMT
மும்பை, 

இந்திப்பட பாடகர் மிகா சிங் வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை திருடியதாக இசை கலைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நகை, பணம் திருட்டு

மும்பையை சேர்ந்த இந்திப்பட பாடகர் மிகா சிங். இவர் ஒஷிவாரா பகுதியில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டு உள்ளது. இதை அறிந்து மிகா சிங் அதிர்ச்சி அடைந்தார்.இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக அவரது மேலாளர் ஒஷிவாரா போலீசில் புகார் கொடுத்தார்.

இசை கலைஞர் மீது வழக்குப்பதிவு

இதைத்தொடர்ந்து போலீசார் அவரது வீட்டுக்கு வந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது, திருட்டு நடந்ததாக கூறப்படும் நேரத்தில் பாடகருடன் பல வருடங்களாக பணியாற்றி வரும் பியானோ இசை கலைஞர் அவரது வீட்டுக்கு வந்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

இதையடுத்து போலீசார் அந்த பியானோ இசை கலைஞர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்