மாநகராட்சி ஊழியர் காலில் குண்டு பாய்ந்த சம்பவம்: துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்கு

திரிசூலம் மலை அடிவாரத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-08-01 20:35 GMT
தாம்பரம்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே உள்ள திரிசூலம் மலை அடிவாரத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. இங்கு கடந்த 30-ந்தேதி ரெயில்வே பாது காப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அதில் ஒரு குண்டு பல்லாவரம் ஈஸ்வரி நகரில் உள்ள ஒரு குடிசை வீட்டுக்குள் பாய்ந்தது. அங்கு படுத்து இருந்த மாநகராட்சி ஊழியரான ராஜேந்திரன்(வயது 40) என்பவரது காலில் அந்த குண்டு பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரது காலில் பாய்ந்த குண்டு அகற்றப்பட்டு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

பின்னர் இதுபற்றி பல்லாவரம் போலீசில் ராஜேந்திரன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கவனக்குறைவாக செயல்பட்டு காயம் ஏற்படுத்தியதாக 286 மற்றும் 337 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்